அந்த நாள் (1954)


எப்போதோ சிறு வயதில் பார்த்த படங்கள் சில, மனதில் தங்கிவிடும். முழுப்படமும் நினைவில் இல்லாவிட்டலும் சில காட்சிகள் அப்படியே நினைவில் இருக்கும். அப்படி என் நினைவில் தங்கிய படம், சன் டிவியிலோ டிடியிலோ பல வருடங்களுக்கு முன் பார்த்த ’அந்த நாள்’. இப்போது பர்ர்க்க முடிந்த போது இன்னும் அதிக பிரமிப்பை ஏற்படுத்தியது. ‘ரஷமோன்’ படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த வகையில் கதை சொல்பவன் நம்பகத்தன்மை அற்றவன் என்ற உத்தியை மட்டும் பயன்படுத்திக்கொண்டு மிகச் சிறப்பாக,ஸ்டைலாக படமாக்கியிருக்கிறார்கள். எஸ்.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பண்டரிபாய்,ஜாவர் சீதாராமன் முதலானோர் நடிப்பில் 1954 இல் வெளிவந்திருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் போது சென்னையை ஜப்பான் இராணுவம் தாக்குகிறது.இந்தப் பிண்ணனியில் நடக்கும் ஒரு கொலையை காவல்துறை துப்பறிவதே கதை.முதல் காட்சியிலேயே ராஜன் (சிவாஜி கணேசன்) சுடப்பட்டு சுருண்டு விழ,சுடுபவர் கோணத்திலிருந்து நாம் பார்க்க,துப்பாக்கி சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் பதறிப்போய் போலீசைத் தேடி அறக்க பறக்க ஓட,மிக சுவாரசியமாக துவங்குகிறது படம். கொலையை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி, ரேடியோ இஞ்சினியர் ராஜனின் மனைவி  உஷாவிடம் (பண்டரிபாய்) விசாரணை செய்துவிட்டு, குண்டுவீச்சின் களேபரத்தில் நடந்த ஒரு சராசரி குற்றம் தான் என்று வழக்கை முடிக்க நினைக்கிறார்.

முக்காப்பேண்டும் கோட்டு தொப்பியுமாக வலம் வரும் சிஐடி சிவானந்தமோ இது சாதாரண வழக்கில்லை என்று உணர்ந்து ராஜனை தெரிந்தவர்களான உஷா,தம்பி பட்டாபி,பட்டாபியின் மனைவி ஹேமா, ராஜனுடன் தொடர்புடைய  நாட்டியக்காரி அம்புஜம், பக்கத்து வீட்டுக்காரர் சின்னையா ஆகிய எல்லோரிடமும் விசாரிக்கிறார். ஒவ்வொருவரும் மற்ற ஒருவருக்கு ராஜனை கொலை செய்யும் நோக்கம் இருப்பதற்கான சம்பவத்தை சொல்கிறார்கள்.கண்டிப்பாக இவர்தான் கொன்றிருப்பார் என்று சந்தேகிப்பதுடன், கொலை எப்படி நடந்திருக்கலாம் என்றும் வர்ணிக்கிறார்கள். இந்த வர்ணனைகள் எந்த அளவு உண்மை என்று ஆராய்ந்து, கொலை நடந்த இடத்தில கிடைக்கும் தடயங்கள் உதவியுடன் யார் கொலை செய்திருப்பார் என்று சிஐடி சிவானந்தம் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது...அவ்வளவு முக்கியமில்லை.கொலைக்கான நோக்கம்,கொலையை சுற்றி அமைந்த சம்பவங்கள் அதைவிட இவற்றை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இவைதான் சிறப்பு.ஒவ்வொருவர் விவரிக்கும் சம்பவங்கள் மூலமாக ராஜன் கதாப்பாத்திரத்தின் இயல்புகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுகிறது. கடைசியில் கொலை செய்யபடுமளவிற்கு என்ன செய்திருப்பார் என்று தெரியும்போது மேலோட்டமாக ஒரு சராசரி சம்பவமாக தோன்றும் ஒன்று, உண்மையில் எவ்வளவு முக்கியமான நிகழ்வாக இருந்திருக்கக் கூடும் என்று புலனாகிறது.
எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக சின்னையாவாக நடித்திருக்கும் பி.டி.சம்பந்தம் நன்றாக நடித்திருக்கிறார்.எல்லோரையும் தூக்கி சாப்பிடுவது வழக்கம்போல் சிவாஜி.கடைசி காட்சிகளில் எப்போதும் போல் அசர வைக்கிறார். ’பொய்,பித்தலாட்டம்..’ என்று தொடங்கும் வசனத்தை சிவாஜி பேசும் பாணி...ஒன்றும் சொல்வதற்கில்லை,நடிகன்!

தோய்வே இல்லாத விறுவிறுப்பான திரைக்கதை.படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. பத்து பதினைந்து பாடல்களும் வைக்கும் காலத்தில் தைரியமாக பாடல்களே இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.பிண்ணனி இசை ஒரளவு நன்றாகவே இருக்கிறது.காட்சியமைப்புகள் மற்றும் கேமரா கோணங்கள் இப்போது கூட புதுமைதான், படம் வந்த காலத்தில் புரட்சியாக கூட இருந்திருக்கலாம்.இப்போது கம்ப்யூட்டர் கேம்களில் அதிகம் காணப்படும் ஃபர்ஸ்ட் பர்சன் பாயிண்ட் ஆஃப் வியு கோணத்தில் பல காட்சிகள் முயற்சித்திருக்கிறார்கள்.ஒரு காட்சியில் கையில் சிகரெட்டும் உதடுகளிலிருந்து புகையுமாக சிவாஜி நிற்பதை சில்ஹவுட்டில் அருமையாக காட்சிப்படுத்திருப்பார்கள்.படம் நெடுக இப்படி பல புது முயற்சிகள்.படத்தின் காலத்தை கருத்தில் கொண்டால், இந்த முயற்சிகளெல்லாம் பிரமிக்க வைக்கின்றன.

பண்டரிபாயை முதல் முதலாக சிவாஜி சந்திக்கும் மாணவர் கூட்டம்,மாட்டு வண்டி மேல் சைக்கிள் மோதிய ’விபத்தை’ பைசல் பண்ண காவல் நிலையம் வரை செல்வது என்று 50களின் இயல்புகள் சுவாரசியம்.ஒவ்வோரு காட்சியாக சிலாகிக்க வேண்டுமென்றால், படம் முழுக்க பாராட்டிக்கொண்டிருக்கலாம். படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அங்கங்கே லாஜிக் ஓட்டைகள், துப்பறியும் கதைகளுக்கே உரிய கொஞ்சம் செயற்கைத்தன்மை எல்லாம் இருக்கின்றன். இருந்தும் ஐம்பதுகளில் பாடல்களே இல்லாமல், இரண்டு மணி நேரப்படம் எடுத்திருக்கிறார்கள் என்பது கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய முயற்சி.எல்லாரும் பார்த்து இரசிக்கூடிய, சினிமா இரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

Digg It! Stumble Delicious Tweet It! Facebook

5 comments:

  1. deepa said...:

    romba nalla irukku,Vaazhthugal !!!!!!! :)))))

  1. shiva... said...:

    i ve seen this film years back ,think so .. remembering few scenes now :)) nice work .. keep going ..

    will watch the film next time in Ktv or sunTv closely !!

  1. நன்றி @shiva. கண்டிப்பாக பாருங்கள்

  1. தங்களின் இந்த விமர்சனம் படம் பார்க்கிற ஆர்வத்தை தூண்டும்;

  1. Nirupama said...:

    romba naal kalithu tamizh katurai madiri ondrai ippo thaan padikeren.. nalla irukku!
    thanks for this experience... i rem'ber watchin the movie too!! good work guys...keep it up :)

Post a Comment